கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும் என்றிருக்க  இந்த விழா காலத்தில்  மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளதாகவும், இந்த நிகழ்வின் போது  பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபட உள்ளனர் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) பத்ரி நாராயணன் தெரிவித்தார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்டத்தில் கைப்பேசிகளை தவறவிட்ட/பறிகொடுத்த வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
 

கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ரூ. 67.5 லட்சம் மதிப்பிலான 451 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 107 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை பொறுத்தவரை, இந்த விழாவானது  மிக அமைதியாக நடக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.  
 

குழந்தைகள் நலன் குறித்து பேசுகையில்  தற்போது கோவை மாவட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்ட மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். 

இதன் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். கல்லூரி, பள்ளிக்கு அருகில் கஞ்சா, போதை பொருட்களை விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.