பொள்ளாச்சி ஆனைமலை ஒட்டியுள்ள டாப்சிலிப் பகுதி சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஒரு இடமாக இருந்து வருகிறது.
டாப்சிலிப்பில் சுற்றுலாப் பயணிகள் வசதிக் காகக்கட்டப்பட்டுள்ள விடுதிகளில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன ஆனால் அதற்கு அருகே உள்ள எருமைப்பாறை குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மின்மாற்றி அமைக்கப்பட்டும் இதுவரை மின் இணைப்பு கிடைக்காததால் ஒளிக்காக டாப்சிலிப் மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து டாப்சிலிப் மலை வாழ் மக்களில் ஒருவரும், டாப்சிலிப் கவுன்சிலருமான சாத்துக் குட்டி கூறியதாவது:
"நீண்ட ஆண்டுகள் கோரிக்கை வைத்தும் தற்போது வரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு மின்இணைப்பு வழங்கப்படும் என்று கூறி மின்மாற்றி அமைத்தனர். ஆனால், தற்போதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வறுமையான சூழலிலும் 24 பேருக்கு மொத்தம் ரூ.70 ஆயி ரத்துக்கும் மேல் மின் இணைப்பு பெற கட்டணம் செலுத்தியுள்ளோம்."
"ஆனால் வனத்துறை தடையில்லா சான்று கிடைக்காததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டால் மத்திய அரசு அனுமதி கிடைக்க வேண்டும் என்கின்றனர். இதேபோல, கீழ்பூனாச்சி, சர்க்கார்பதி என பல்வேறு பகுதிகளில் மின்சாரம் அருகில் இருந்தும் இணைப்பு கள் கிடைக்கவில்லை"
இவ்வாறு அவர் கூறினார்.