தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார். 

 

 

இதுதொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

 

பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

 

 இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. 

 

அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும்.

 

 இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும்.

 

 இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.