தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில் மிக பெரிய அளவில் இன்றும் கொண்டாடப்படும் நடிகராக உள்ள கவுண்டமணி மீண்டும் ஒரு திரைப்படத்தில் 6 வருடங்கள் கழித்து நடிக்கவுள்ளார்.
இறுதியாக ‘வாய்மை’ என்ற படத்தில் நடித்திருந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் களத்தில் காலெடுத்து வைத்துள்ளார்.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் கவுண்டமணி. அறிமுக இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கும் இந்தப்படத்திற்கு ‘பழனிச்சாமி வாத்தியார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது; மேலும் இந்தப்படத்தில் நடிகர் கவுண்டமணியுடன் நடிகர்கள் யோகிபாபு மற்றும் கஞ்சா கருப்பு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
அண்மையில் தான் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.