கோவை கிரைம் செய்திகள் - 10.5.25
- by CC Web Desk
- May 10,2025
"சந்திப்பு குமார் ரெட்டி-யை கண்டுபிடித்து கொடுங்கள் ... பல கோடியை மக்கள் இழந்துள்ளனர்" - இருவர் போலீசில் புகார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும், ஃபேஸ்புக் மூலம் இவருக்கு நண்பரான சுதாகர் என்பவரும் வெளிநாட்டில் வேலை பெறுவதற்கு முயற்சித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் ரெட்டி என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் அவரை தொடர்பு கொண்ட போது, ஸ்விட்சர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் 'செல்லாரா' என்ற நிறுவனத்தின் தலைவராக தான் உள்ளதாகவும், அங்கு ஏராளமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் சஞ்சீவ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை பெறுவதற்கு முதல் கட்டமாக நபர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டுமென சஞ்சீவ் குமார் ரெட்டி, மகேஷ் பாபுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் அதிக அளவில் ஆட்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு தேவை என்பதால் முன்பணம் கொடுத்தால் அனைவருக்கும் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக மகேஷ் பாபு மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் உரிய கமிஷன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்று பல்வேறு தவணைகளில் இருவரும் கோவை வந்து சஞ்சீவ் குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து சுமார் 5 கோடி ரூபாய் வரை பணம் வழங்கி உள்ளதாக கூறியுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட சஞ்சீவ் குமார் அந்த நபர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான பணி ஆர்டர்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே வேலை தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது சஞ்சீவ் குமார் ரெட்டி தொடர்புகளை துண்டித்ததோடு, கோவையில் இருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
அவரை கண்டறிய முயன்றபோது அவர் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் பாபு இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் சஞ்சீவ் குமார் ரெட்டி இதேபோன்று தஞ்சாவூர், கேரளா உள்ளிட்ட இடங்களிலும் பலரிடம் பல கோடி ரூபாய் அளவிற்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். எனவே தலைமறைவாக உள்ள சஞ்சீவ் குமார் ரெட்டியை கண்டுபிடித்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கே தெரியாமல் தனது கைபேசியை அடமானம் வைத்து மது வாங்கிய நண்பனை தட்டி கேட்ட நபருக்கு அடி, உதை!
தஞ்சாவூர் வீரமான்குடியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (19). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது நண்பர் ஹரிஷ் என்பவரை சந்திக்க வந்தார்.
அவருடன் அங்கு 2 நாட்களாக தங்கிருந்தார். 6ம் தேதி மோகன்ராஜ் தஞ்சாவூர் செல்ல முடிவு செய்து சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார். அப்போது தனது மற்றோரு நண்பர் சுரேந்தர் என்பவரை பஸ் ஸ்டாண்டுக்கு வரும் படி தெரிவித்தார். அவரும் அங்கு வந்து மோகன்ராஜை தனது அறைக்க அழைத்து சென்றார். அப்போது மோகன்ராஜ் மற்றும் சுரேந்தர் மது குடித்துள்ளனர்.
பின்னர் சுரேந்தர், மோகன்ராஜின் செல்போனை எடுத்து வெளியே சென்றார். சிறுது நேரம் கழித்து சுரேந்தர் பீர் பாட்டிலுடன், அவரது நண்பர்கள் ரங்கராஜ் மற்றும் ஆதித்தியா ஆகியோரை அழைத்து கொண்டு வந்தார். அந்த சமயத்தில் மோகன்ராஜ் தான் ஊருக்கு புறப்படுவதாகவும், தனது செல்போனை திருப்பி தரும்படியும் கேட்டுள்ளார்.
அப்போது சுரேந்தர், மோகன்ராஜின் செல்போனை ரூ.3000க்கு அடமானம் வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ், சுரேந்தரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தனது நண்பர்கள் ரங்கராஜ் மற்றும் ஆதித்தியா ஆகியோருடன் சேர்ந்து மோகன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி பீர் பாட்டில் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கினார்.
பலத்த காயம் அடைந்த மோகன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மோகன்ராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுரேந்தர், ரங்கராஜ், ஆதித்தியா ஆகியோரை தேடி வருகின்றனர்.