புது ஓமிக்கரன் வகை கொரோனா வைரஸ் ஒன்று மீண்டும் அதிகளவில் உலகில் கொரோனா தொற்று ஏற்பட காரணமாகியுள்ளது. இந்தியாவில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் படி மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

 

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொரோனா தொற்று மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குப்பில் மாவட்டத்தில் எடுத்துவரும் நடவடிக்கை பற்றி கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது: 

 

பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், இருமல் தும்மல் ஆகியவை இருக்கும்போது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடிக்கொள்ளுதல் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

 

பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை நோய் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு வரும் பயணிகளில் பொதுவாக 2 நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இப்பணிக்காக மருத்துவ அலுவலர் சுகாதார ஆய்வாளர், ஆய்வக நுட்புனர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து நோய் கண்காணிக்கும் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்வார்கள்.

 

இதில் நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற பயணிகள் வீட்டில் தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவேண்டும். சுய கண்காணிப்பின் போது நோய் அறிகுறி தெரியவந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 1075 என்ற எண்ணில் பயணிகள் தெரிவிக்கவேண்டும்.

 

வெளிநாட்டிலிருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரி மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.