கோவை மாநகர போலீஸ் பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

 

இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

 

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர், டிரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது.

 

இந்த ஒத்திகை நிகழ்வை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிறுபவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும்.



மேலும் இந்த ட்ரோன்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும். ஓடிச் செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும்.



தமிழகத்தில் போலீஸ் துறையில் டிரோன்கள் பயன்படுத்தவது கோவையில் தான் முதல் முறை இவ்வாறு அவர் கூறினார்.