கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 



இந்த வளாகத்தில் சாலை வசதிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும்வேலைகள் சில தினங்களில் துவங்கப்பட உள்ளதாகவும் இதனால் வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து  கடைகளும் பணிகள் முடியும் வரை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருகிடங்கு மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்துக் கொள்ளும்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.



இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் நோட்டீஸ்க்கு அண்ணா தினசரி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.



இதுகுறித்து அண்ணா மார்க்கெட் சங்க தலைவர்  சந்திரன் கூறுகையில்:- 

எருகிடங்கு மைதானத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் நடைபெறாது எனவும், இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படையும். ஏற்கனவே எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மண்டியிலும் சில்லறை வியாபாரங்களும் துவங்கி விட்டதால் அண்ணா தினசரி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தங்களை இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் தற்போது கிடைக்கும் வருமானமும் இழக்கக்கூடும்.


இன்று மனு அளித்து உள்ளோம் வியாபாரிகளுக்கு ஆதரவாக நிர்வாகம் முடிவு எடுக்க வில்லை என்றால்  அடுத்து போராட்டம் நடத்துவோம்.எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த நோட்டீசை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார்.