2022-ம் ஆண்டு 02.10.2022, ஞாயிறு அன்று "காந்தி ஜெயந்தி தினம்" கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. 


எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்  தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.