கோவை சரவணம்பட்டி பகுதியில் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க 2023ல் அங்கு மாநில நெடுஞ்சாலை துறையின் என்.ஹெச். பிரிவு தரப்பில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியில் சரவணம்பட்டி வழியே ரயில் தடம் வரவுள்ளதால் மேம்பாலம் கட்டும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,கோவையில் மெட்ரோ திட்டத்தை முன்னெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சரவணம்பட்டியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் ஒன்றை கட்டி, அதன் கீழடுக்கில் வழக்கமான வாகன போக்குவரத்தும் மேலடுக்கில் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நடைபெறும்படி திட்டமிட்டது.

இந்த திட்டத்தின் கீழ் முதலில் இரண்டு அடுக்குகளுக்கும் தேவையான தூண்களை நிறுவும் பணியை மெட்ரோ நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்பட்டது. இந்த பணி நடைபெற்ற பின்னர் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கீழடுக்கில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேல் அடுக்கு பணிகளை மெட்ரோ நிறுவனம் முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளிவந்தது.

தற்போது இதில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதன்படி இந்த இரண்டு அடுக்கு பணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே மேறகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு பணிகளை மெட்ரோ நிறுவனம் செய்வதே இந்த திட்டத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என்பதால் நெடுஞ்சாலை துறை இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான வடிவமைப்பு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக இந்த தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.