மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், நாட்டு நலப்பணித் திட்டம் வழியாக, இளைஞர் பாராளுமன்றம் எனும் பிரம்மாண்ட நிகழ்வை நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது அதன் நோக்கமாகும். 

இத்தலைப்பில் கல்லூரி மாணவர்களிடமிருந்து ஒரு நிமிட காணொளி வரவேற்கப்பட்டு பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி “My Bharath” என்ற இணையதளம் வழியாக பதிவுகள் பெறப்பட்டன.

இப்போட்டியை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கல்லூரிகளைக் கொண்டு நடத்தி, சிறந்த காணொளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு மையமாக, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை,  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்தது.

இதன் இறுதி சுற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (20.03.2025) நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 18 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்று “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினர்.

முன்னதாக 660 மாணவர்களிடம் இருந்து பதிவுகள் பெறப்பட்டு, அதிலிருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற நிகழ்வில் அந்த 150 பேரிலிருந்து சிறப்பாகச் செயல் விளக்கம் அளித்த 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் விவரம் பின்வருமாறு :-

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சங்கமி, நேகா தாஸ்; ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சல்மான் பாரிஸ், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் அஜய் பிரசாந்த்; ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆர்த்தி சரண், குமரகுரு கலை அறிவியல் கல்லூரி மாணவர் முகமது அஸ்வத், அபிராம்; பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி பிரபிதா; சங்கரா கலை அறிவியல் கல்லூரி மாணவி ஜனனி; ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணா.

மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் 3 மாணவர்கள் புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக இந்த விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்கவந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

வழக்கறிஞர் வி.சிவக்குமார், நீலகிரி வழக்கறிஞர் பி.குமரன், முன்னாள் வனக் கால்நடை அலுவலர் டாக்டர் என்.எஸ்.மனோகரன், நேரு யுவகேந்திரா கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், நிறை அறக்கட்டளை திட்ட செயல் இயக்குநர் என்.ஆர்.பரமேஸ்வரி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.