மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சியின் எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் கோவையில் உள்ள பரபரப்பான காய்கறி சந்தைகளில் ஒன்றாகும்.

இங்கு 112 கடைகள் உள்ளன. நள்ளிரவு 3 மணி முதலே இங்கு வியாபாரம் சார்ந்த பணிகள் ஆரம்பிக்கும். இங்கிருந்து கோவையின் உள்ளூர் கடைகளுக்கு மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் காய்கறிகள் அனுப்பப்படும்.

இந்த மார்க்கெட் பகுதியில் கனமழை காலங்களில் மழைநீர் தேங்குவதால் அங்கு வரும் காய்கறி வாகனங்கள் கடந்த காலங்கில் மிகவும் சிரமப்படுவதை அடுத்து, இதற்கு தீர்வாக மார்க்கெட்டை புதுப்பிக்கும் நடவடிக்கை (மார்க்கெட் முழுவதும் கான்க்ரீட் தளம் அமைக்கும் பணி) நடைபெற்றுவருகிறது. ஆனால் 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அது தொடர்ந்து நடந்துகொண்டே வருவது வியாபாரிகளை சிரமத்துக்குளாக்கி வருவதாக தெரியவருகிறது.

இந்த பணிகள் தாமதமாக நடைபெற்றுவருவதால் வியாபாரிகள் தினமும் இடையூறுகளை சந்திக்கவேண்டி உள்ளது எனவும், இப்பணிகளால் அவர்களுக்கு இடவசதி சரிவர இல்லை எனவும் கூறுகின்றனர். "எந்த இடத்தில் காய் கரிகளை வாகனங்களில் இருந்து இறக்குவோமோ அங்கேயே மணல், செங்கல் கொட்டப்படுகிறது," என அவர்கள் கூறியுள்ளனர்.

பணிகளை இனியும் தாமதப்படுத்தாமல் விரைந்து, பருவமழை காலம் வருவதற்குள் முடித்துக்கொடுக்க வேண்டும் என அவர்கள் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் அங்கு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1 மாத காலத்தில் பணிகள் முடிக்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.