கோவை மதுக்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 7 ரயில்களின் சேவையில் நாளை (மே 11) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. எனவே சொர்ணூரில் இருந்து 11-ந் தேதி காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ரயில் (எண் 06458), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 16324) ஆகியவை பாலக்காடு-கோவை இடையே ரத்து செய்யப்படுகின்றன.


கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்.06459) கோவை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இது தவிர, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு வரும் ரயில் (எண் 16843), போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.


சொர்ணூரில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 06804), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11.05 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 22609) ஆகியவை பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.


கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு நகரம் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண் 06807) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.