டிமாண்ட் அதிகம் உள்ள கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுமா?
- by David
- May 05,2025
கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஏப்ரல் 2023ல் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியே செல்லும் இந்த சேவைக்கு துவக்கத்தில் இருந்தே பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த ரயில் சேவையில் கூடுதல் பெட்டிகள் வழங்கப்பட்டால் அது நன்கு பயன்படுத்திக்கொள்ளப்படும் என பயணிகள் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ரயில் பயணிகள் சங்கம் சார்பில் 8 பெட்டிகள் உள்ள இந்த ரயிலை 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலாக தரம் உயர்த்தா கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பயணிகளிடமிருந்து இந்த ரயிலுக்கு பெரும் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரயில்வே அமைச்சரை சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் இந்த ரயில் சேவைக்கு டிக்கெட்கள் என்றுமே டிமாண்டில் உள்ளது என குறிப்பிட்டு தனது கோரிக்கை கடிதத்தில் இந்த ரயில் பெட்டிகளை அதிகரித்து வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
எனவே, ரயில்வே வாரியம் இந்த வேண்டுகோள்களை ஏற்று விரைவில், கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் பெட்டிகளி்ன் எண்ணிகைகளை அதிகப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.