10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கோவை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 
இந்த பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்ட பிரவுக்காக ஹைதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர். கண்ஸ்ட்ராக்ஷன் எனும் நிறுவனம் ஒப்பந்த ரீதியில் உருவாக்கி வருகிறது. இப்போது 90%க்கும் அதிகமாக முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தற்போது நடைபெறும் அதன் டெண்டர்கள், மற்றும் எதிர்கால டெண்டர்களில் பங்கேற்க அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

எதனால் இந்த நடவடிக்கை?

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை 66ன் விரிவாக்க பணிகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது. இதற்கான திட்டமிடல் ஆலோசனைகளை ஹைவே இன்ஜினியரிங் கண்சால்டன்சி எனும் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த மே 19ம் தேதி அன்று நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணி நடைபெற்று வந்த ஒரு மிகப்பெரும் பகுதி கடும் சேதமானது. மேலும் இதில் ஒரு சர்விஸ் சாலையும் உடைந்தது. 
இதையடுத்து, அந்த ஒப்பந்த நிறுவனம் மற்றும் ஆலோசனை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி இந்த 2 நிறுவனங்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், (NHAI), தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான மேம்பாட்டு கழகம் (NHIDCL),  மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் டெண்டர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.