கோவை மாநகரில் உருவாகும் பல டன் கோழி இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் புதைக்கப்பட்டு வருகிறது. இதை கண்டறிந்த அப்பகுதி மக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கவனத்திற்கு அதை எடுத்து சென்றதன் காரணத்தால் அங்கு வாரியம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. 

 

அப்போது இதுபோன்று குழி தோண்டி கோழி இறைச்சி கழிவுகள் புதைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைவதாக ஆய்வு செய்த அதிகாரி வாரியத்திடம் அறிக்கை ஒன்றை சமீபத்தில் சமர்ப்பித்து இருந்தார். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மற்றும் ஒரு சம்பவம் இன்று அங்கு நடைபெற்றுள்ளது.

 

ஞாயிறு (8.6.25) இரவு 7:45 மணி அளவில் கோவை மாநகராட்சியின் கழிவுகள் சுமந்து செல்லும் வாகனம் ஒன்று பெருமளவில் மாட்டிறைச்சி கழிவுகளுடன் வெள்ளலூர் குப்பைகிடங்கு நோக்கி சென்றுள்ளது. இறைச்சிக் கழிவு வாடை மோசமாக அந்த வாகனத்தில் வீசியதை அடுத்து அந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் கவனித்தபோது வண்டியில் மாட்டிறைச்சி கழிவு இருந்தது தெரிய வந்தது. இதை அவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

குப்பை கிடங்கில் கோழி இறைச்சி கழிவுகள் இதுவரை புதைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாட்டிறைச்சி கழிவும் அந்த லிஸ்டில் சேர்ந்து உள்ளதா என்ற சந்தேகம் தற்போது அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. 

 

 

கோழி இறைச்சி கழிவு பிரச்சனை பற்றி கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாமோதரன் கோவை மாவட்ட கலெக்டரிடம் விரிவாக கடிதம் மூலம் எடுத்துரைத்திருக்கிறார். 

 

வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கோவை மாநகரில் உருவாகும் கோழி இறைச்சி கழிவுகளை எடுத்து வராமல், அதை மண்டலம் வாரியாக மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரை அவர் சமீபத்தில் கேட்டுக் கொண்டார். பொதுமக்களும் இந்த பிரச்சனை குறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கவனம் வரை எடுத்துச் சென்றுள்ளனர். 

 

கோழி இறைச்சி கழிவு வரிசையில் மாட்டிறைச்சி கழிவு புதைக்கப்படுகிறது என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இதை மாநகராட்சி தான் சரி செய்ய வேண்டும்.