கோவையில் 13 புதிய அரசு பேருந்துகளின் துவக்க நிகழ்வும் , பணியின் போது இறந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வும் கோயம்புத்தூர் சுங்கம் கிளை-1 அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு புது பேருந்துகளில் இயக்கத்தை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து கோயம்பத்தூர் கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது இறந்த 44 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற 44 பேரில் 22 பேர் பெண்கள். இவர்கள் பெண் நடத்துனர்களாக செயல்பட உள்ளனர்.

புதிதாக பணியில் சேரும் நபர்களிடம், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நல்ல விதத்தில் சேவை வழங்க உழையுங்கள் எனவும், அரசு போக்குவரத்து துறை என்பது ஒரு சேவை துறை என்பதை நினைவில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

"கடந்த 2 நிதியாண்டுகளில் கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 317 பேருந்துகள் வந்துள்ளன. 2024-25 நிதி ஆண்டுக்கான பேருந்துகளாக 321 புது பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் முதல்கட்டமாக 13 புது பேருந்துகள் இன்று துவக்கப்பட்டுள்ளது," என அமைச்சர் கூறினார்.