கோழி இறைச்சி கழிவுகள் புதைக்கப்படுவதும், நிலத்தடி நீர் பாதிப்படைவதும் கோவையில் தொடருகிறது! தடுக்க வலியுறுத்தி கலெக்டருக்கு எம்.எல்.ஏ கடிதம்!
- by David
- May 28,2025
வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கோவை மாநகரில் உருவாகும் கோழி இறைச்சி கழிவுகளை எடுத்து வராமல், அதை மண்டலம் வாரியாக மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரை கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாமோதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் பின்வருமாறு :-
கோவை மாநகரில் உருவாகும் கோழி இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் புதைக்கப்படுவதாகவும், அதனால் நிலத்தடி நீர் அங்கு மேலும் மாசடைய சாத்தியம் உள்ளதால் அதை நிறுத்தவேண்டும் என குப்பைக்கிடங்கு சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் கோவை மாநகராட்சியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதமாக வழங்கி, இதனை தடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதை அடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 21.4.2025ல் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், இது குறித்த அறிக்கை மாசக்கட்டுப்பாடு வாரியத்தின் செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், குப்பை கிடங்கில் வைத்து கோவை மாநகரில் உருவாகும் கோழி கழிவுகளை மேலாண்மை செய்து வந்த தனியார் நிறுவனம் அந்தப் பணியை அங்கே செய்ய 31.3.2027 வரை பணி நடத்த ஒப்புதல் பெற்று இருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் இந்த பனியால் பாதிப்புள்ளதாக குற்றம் சாட்டியதை அடுத்து அது மூடப்பட்டிருக்கிறது. வாரநாட்களை விட ஞாயிறுகளில் கோழி கழிவுகள் அதிகமாகிறது.
தற்போது அவை 'விக்கி டிரேடர்ஸ்' எனும் தனியார் நிறுவனம் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஆனால் இந்த பணியை செய்யும் இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் இசைவு ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதும் இந்த நிறுவனம் இப்பணியை செய்கிறது என்பது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த கழிவுகள் ஞாயிறு அன்று குப்பை கிடங்கில் ஆழமாக புதைக்கவும்படுகிறது எனவும், இவ்வாறு குப்பை கிடங்கில் கோழி இறைச்சி கழிவுகளை ஆழமாக புதைப்பதால் நீர் மாசு மற்றும் நில மாசுகள் ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அப்பகுதி மக்கள், கோவை மாநகரின் 5 மண்டலங்களில் உருவாகும் இறைச்சி கழிவுகளை குப்பைக்கிடங்கிற்கு எடுத்து வராமல், குப்பை மாற்று மையம் போல இந்த கழிவுகளை அந்ததந்த மண்டலத்தில் ஒரு தனி இடத்தை உருவாக்கி அங்கிருந்து மொத்தமாக வாகனங்களில் இந்த கழிவுகளை மேலாண்மை செய்யும் இடத்துக்கு எடுத்து செல்ல முயற்சி எடுத்தால், தங்கள் பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக, பாதுகாப்பான முடிவாக அது இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்தனர்.
ஆனால் கோழி இறைச்சி கழிவுகள் அங்கு கொட்டப்படுவது நின்றபாடில்லை.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செ. தாமோதரன், கோவை மாவட்ட கலெக்டருக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :-
இப்போது எனது தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 20 நாட்களாக கோழி கழிவுகளை வெளியில் எடுத்து செல்லும் தனியார் நிறுவனம் சரிவர அப்பணியினை மேற்கொள்ளாமல் குப்பை கிடங்குகளிலுள்ள நிலத்தில் கோழி கழிவுகளை குழிதோண்டி புதைக்கிறார்கள். அதனால் நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும்.
ஏற்கனவே மகாலிங்கபுரம், கோணவாய்க்கல்பாளையம் மற்றும் ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் நீர் மாசுப்பட்டு பொதுமக்கள் அந்நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள். எனவே தாங்கள் கோவை மாநகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் கோழி கழிவுகள் அனைத்தும் வெள்ளலூர் குப்பைக்கிடங்க்கு கொண்டு வராமல் மண்டலங்களியே இடங்கள் தேர்வு செய்து கழிவு மேலாண்மை செய்ய அல்லது வெளியில் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.