மழைக்காலம் முடிந்த பின்னர் கோவை சாலைகளில் குழிகளால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு - அமைச்சர் முத்துசாமி உறுதி
- by CC Web Desk
- May 26,2025
இன்று கோவை கலெக்டர் பவன்குமாரை அதிமுக தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.
அதை தொடர்ந்து அவர் பேசுகையில், மழை வருகின்ற நேரங்களில் குளத்திற்கு வருகின்ற வாய்க்கால்களை சுத்தம் செய்திருக்கவேண்டும். இம்முறை மழைக்கு முன்னதாக சரியாக தூர் வாரவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
2 நாட்களுக்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபற்றி பேசியதாக கூறிய அவர், இந்த பணிகளை அதிகாரிகள் சரியாக செய்யவில்லை என கூறினார். அதன் தாக்கம் இன்று நொய்யல் ஆற்றில் தெரிந்ததாக குறிப்பிட்டார். மழை வரும் போது தண்ணீரை தேக்குவது அவசியம் என்பதால் வாய்க்கால்களை சரியாக தூர் வார வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதே சமயம், மாவட்டத்தில் மழையால் விவசாய பகுதிகளில் வாழை உட்பட பல பயிர்கள் பாதிக்கபட்டுள்ளது , எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், கோவையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இன்று கோவை கலெக்டர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் கோவை செல்வ சிந்தாமணி குளம், பேரூர் நொய்யல் ஆற்று பாலம், புட்டு விக்கி நொய்யல் ஆற்று பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் வரத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதற்கடுத்ததாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே மேட்டுப்பாளையம், வால்பாறை மற்றும் மாநகராட்சி என எந்த இடமும் பெரிய அளவிலான பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும் கூறினார்.
பல இடங்களில் கடந்த முறை வந்த மழையை கருத்தில் கொண்டு முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளில் எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறினார்.
சில இடங்களில் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முதற்கட்டமாக ரூ.23 லட்சம் மற்றும் அதற்கு அடுத்ததாக ரூ. 2.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அது வழங்கப்பட்டதும் விவசாயிகளுக்கு விரைந்து அந்த நிவாரணம் கொடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
கோவை மாவட்டத்தில் 90 இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் மிக குறைவான இடத்தில் மட்டும் மழை பாதிப்பு ஏற்பட்டு ஒரு முகாமில் மட்டும் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது, நகராட்சி, பேரூராட்சிகளில் தண்ணீர் செல்ல உள்ள வழிகளை முறையாக பராமரித்து தான் காரணம் என கருதுவதாக கூறினார்.வருங்காலத்தில் இப்போது ஏற்படும் சிறு பிரச்சனைகள் கூட இல்லாத படி இருக்க திட்டங்கள் எடுத்துவருகின்றனர்.
மேலும் கோவை மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யவில்லை என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றால் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், முன்னேற்பாட்டை செய்திருந்த காரணத்தால் மட்டுமே எந்த சாலையிலும் தண்ணீர் நிற்கவில்லை, எந்த வீட்டிற்குள்ளும் மழை வெள்ளம் செல்லவில்லை என கூறினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவையில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்களுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளால் பொது மக்கள் மிகப்பெரும் துயர் அடைந்து வருகிறார்கள் என கூறியதற்கு, அமைச்சர் முத்துசாமி இது மழைக்காலம் என்பதால் சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை, மழை முடிந்த பிறகு எங்கெல்லாம் பேட்ச் ஒர்க் செய்யவேண்டுமோ, எங்கெல்லாம் சாலைகள் அமைக்க வேண்டுமோ அங்கெல்லாம் அந்த பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.