கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

 

ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

 

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

 

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து நாடு முழுவதும் ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

 

அந்த வகையில் புனித ரமலான் தினமான இன்று கோவை உக்கடம் பகுதியில் ரோஸ் கார்டன் நண்பர்கள் சார்பில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

 

முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 500க்கும் குழந்தைகள்,பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

 

புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.