அமெரிக்காவில் உள்ள ஈவிகோ (EVgo) நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை உருவாக்கும் நிறுவனம். 

அந்த நிறுவனத்தின் லோகோவை (logo) கொண்ட செயலியை போலியாக உருவாக்கி அதே பேரில் ஈவிகோ எனும் முதலீட்டு நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் துவங்கி உள்ளனர்.

இந்த செயலின் நிறுவனர் வீசிஸ் தேசாய் எனவும், அதிக லாபம் தரும் மூன்று கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளதாகவும் இந்த போலி செயலிக்கு பின்னால் உள்ளவர்கள்  விளம்பரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி அந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை இந்த போலி ஈவிகோ நிறுவனம் கொடுத்து வந்துள்ளது.

இதனை நம்பி தங்களது உறவினர்கள் மற்றும் அருகிலிருப்பவர்ககளுக்கு பணம் பெற்றவர்கள் சொல்லவே, இந்த நிறுவனத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இந்த நிறுவனத்திற்கு பின்னால் இருந்தவர்கள் வாட்ஸ் ஆஃப் செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகோ செயலி செயல்படாமல் இருந்துள்ளது. வாட்ஸ் ஆஃப் குழு இருப்பதால், அதில் தகவல் வரும் என லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் காத்திருந்துள்ளனர்.

முதலீட்டாளர் ஒருவர், இதே பேரில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஈவிகோ நிறுவனத்திடம் ஈ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இங்கு செயல்பட்டு வருவது போலிச்செயலி என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர், சுமார் 30 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத்தருமாறு புகாரளித்துள்ளனர்.