கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் உள்ள பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடுவது அதிகப்படுத்தப்படுகிறது!
- by CC Web Desk
- May 05,2025
ஈரோடு மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை நகை பணத்திற்காக திருடர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையாக பண்ணை வீடுகள், கிராமத்து தோட்ட சாலைகள் அதிகமாக உள்ள பொள்ளாச்சி-ஆனைமலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பண்ணை வீடுகள், விவசாய தோட்டத்து சாலை வீடுகளில் வசிப்பவர்கள், தோட்டத்து உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பண்னை வீடு, தோட்டத்து சாலை சூழலில் வசிப்பவர்கள் எவ்வாறு பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடன் இருப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கைபேசி எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், முக்கியமாக வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பர்கர் அலாரம் சிஸ்டத்தை பொருத்த வேண்டும், வெளியூர் சென்றால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தனிமையில் உள்ளவர்கள் வீடு மற்றும் தோட்டத்தைச் சுற்றி போதிய வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேலிகளை அமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செல்போன்களில் காவல் உதவி செயலிகளை பதிவேற்றம் செய்து எளிதில் காவலர்களை அணுக செயலிகளை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். க்கம்பக்கம் உள்ளவர்களை ஒன்றிணைத்து வாட்ஸாப் (WhatsApp) குழுக்களில் தகவல்களை பகிர வேண்டும். வாட்ஸாப் குழு அமைத்து அதில் கிராம மக்கள் காவல் துறை உடன் இனைந்து குற்றவாளிகள் பற்றியோ அல்லது சந்தேகப்படும் நபர்கள் பற்றியோ பகிர்ந்து கொள்வது பற்றியும் இன்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் பண்ணை வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில், குறிப்பாக பொள்ளாச்சி - ஆனைமலை பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியில் அதிகமாக ஈடுபடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.