சிங்காநல்லூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வுகாண அங்கு மேம்பாலம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு சில காரணங்களால் அத்திட்டத்தில் முன்னேற்றம் காணாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையிடம் மேம்பால திட்டத்திற்கான புது மதிப்பீட்டை மாநில நெடுஞ்சாலை துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவு சமர்ப்பித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 2022ல் ரூ.110 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு 2022ல் ஒப்புதல் வழங்கியது. ஆனால் மெட்ரோ ரயில் திட்டம் திருச்சி சாலை வழியே வருவதால் இங்கு மேம்பாலம் கட்டும் பணி தள்ளிப்போனது. அதற்கடுத்து மெட்ரோ ரயில் திட்டம் முதலில் அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை வழியே தான் அமைக்கப்படவுள்ளது என்பதால் மெட்ரோ இந்த மேம்பாலத்திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவதில்லை என்பதால் டெண்டர்கள் விடப்பட்டன.

ஆனால் 2022ல் ரூ.110.8 கோடியில் செயல்படுத்தலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது அதே தொகையில் செயல்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. .ஏனென்றால் கட்டுமான பொருட்கள் எல்லாமே பல மடங்கு விலையேறிவிட்டன. எனவே இந்த மேம்பால திட்டத்திற்கான டெண்டரை இந்த மதிப்பீட்டில் எடுக்க அனுபவமிக்க பெரிய நிறுவனங்கள் எதுவும் முன் வராமல் இருந்தன.

இந்நிலையில் இந்த மேம்பால  திட்டத்தின் மதிப்பீட்டு தொகையையும், அதன் வடிவமைப்பையும் திருத்தம் செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் இறங்கினர். தற்போது ரூ.180 கோடியில் இந்த மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதன் திட்ட வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் 2.4 கிலோமீட்டர் தொலைவிற்கு உழவர் சந்தை முதல் ஜெய் சாந்தி தியேட்டர் அருகே வரை இந்த மேம்பாலம் வருகிறது. இதற்கான ஒப்புதல் மற்றும் நிதி வழங்கப்பட்டவுடன் இந்த திட்டம் வேகமெடுக்கும் என தெரியவருகிறது. இந்த வருடத்தில் இதற்கான முன்னேற்றம் இருக்கும் என நம்பிக்கை பிறந்துள்ளது.