இன்டர்நெட், சமூக வலைதளங்களில் பரவுகின்ற ஆபாசங்கள், ஆபாச விளமபரங்களும் பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே அவற்றை அரசாங்கங்கள் தடை செய்ய வேண்டும் என கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கூறினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்வில்  கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு குறித்து ...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மூலையில் நடக்கக் கூடாது என்ற அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்குறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது இதில் உறுதிபடுகிறது.

அந்த வகையில் அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன் ஏற்கனவே குறிப்பிட்டது போல இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட  ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது.

கட்சிகள் உரிமை கோருவது பற்றி ...

இந்த தீர்ப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க என உரிமை கோறுவதில் நியாயம் இல்லை, சான்றுகள் வலுவாக இருந்தது குறிப்பாக செல்போன்கள் மற்றும்  சமூக வலைத் தளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது.

அதுவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை அதிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை, அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையாங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோறுவதில் அர்த்தமில்லை.

பாலியல் குற்றங்கள் பெருக இதுவும் காரணம் ...

பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வருகிறதோ அதே வேளையில் சமூக வலைதளங்களில் பரவுகின்ற ஆபாச வலைத்தள விளம்பரங்கள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.

இந்த வலைதளங்களை முற்றிலும் பயன்படுத்தாத அளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், ஒன்றிய அரசுக்கும் கூடுதல் பொறுப்பு இருகிறது, மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு இவையும் முக்கியமான காரணமாக உள்ளது. என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.