கட்டுமான பணிகளுக்காக கோவை மாநகருக்குள் பல வாகனங்கள் கான்கிரீட் கலவை சுமந்துகொண்டு வருகின்றன. அவ்வாறு வரும் வாகனங்கள் தாங்கள் கொண்டுவந்த பணிக்காக கான்கிரீட் கலவையை பயன்படுத்திவிட்டு மீதம் ஆகும் கான்க்ரீடை முறையில்லாத வகையில் வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் ஒரு  அறிக்கையாக வெளிவந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கான்கிரீட் கலவை (Ready Mixed Concrete) கொண்டு செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கான்கீரிட் கலவையை இறக்கியது போக மீதமுள்ள சிமெண்ட் கலவையினை தண்ணீருடன் சேர்த்து சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது.

இவ்வாறு செயல்படும் நிறுவனத்தின் இச்செயலானது பொது இடங்களில் தேவையற்ற கடினமான மேடு உருவாக்கி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், சாலை விபத்துகள் ஏற்படுவதுடன் மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

இனி வரும் காலங்களில் பொது இடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலைகளில் இவ்வாறு கான்கீரிட் கலவை கொட்டப்படும் பட்சத்தில் சமந்தப்பட்ட Ready Mixed Concrete நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.