வக்பு சட்டத்திருத்தம் என்பது இன்று அவசியமில்லாத ஒன்று - த.வெ.க கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார்
- by David
- Apr 04,2025
வக்பு என்பது இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் இறைவனின் பெயரால் சேவை நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படுகிறது என்று கருதப்படுகிறது. முஸ்லிம்களில் ஏழைகள், ஆதரவற்றோர், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காகவும் தொழுவதற்கான தலங்களை உருவாக்குவதற்காகவும் வக்பு உருவாக்கப்பட்டது என்ற கருதப்படுகிறது.
1995ம் ஆண்டின் வக்பு சட்டத்தைத் திருத்துவதற்கு மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை பாஜக அரசு அறிமுகம் செய்தது. இதற்கு ஆதரவாக புதன்கிழமை மக்களவையில் 288 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் அக்கட்சியின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே த.வெ.க கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தின் போது த.வெ.க கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார் பேசுகையில் :-
வக்பு சட்டத்திருத்தம் என்பது இன்று அவசியமில்லாத ஒன்று எனவும் இது சிறுபான்மையினருக்கு உண்டான உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை எனவும் பார்ப்பதாக த.வெ.க. கருதவதாக கூறினார். பிளவுவாத அரசியலை தொடர்ந்து மக்களிடையே திணித்து வரும் பாஜக அரசை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.
த.வெ.க.வின் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், 28 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றியம், கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் என அவர் கூறினார்.