தற்போது கோடை காலம் நிகழ்ந்து வருகிறது. எதிர்ப்பாராத நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல்கள், டிராபிக் சிக்னல்கள் இருக்கக்கூடிய இடங்களில் நிற்கும்போது வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படைய கூடாதென பச்சை நிற கூரைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் கோவை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று கோவை வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா, கோடை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். 

இன்று அவர் தலைமையில், மாவட்ட அளவிலான குடிநீர் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 228 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என கிரண் குராலா விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இத்துடன் மேலும், கோயம்புத்தூர் அலுவலர்களுக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.