பா.ஜ.க.வின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் L. முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவும் நாளை பிரதமர் கோவை வருகிறார். 

இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி பகுதியில் உள்ள நான்குரோடு சந்திப்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஒத்திகைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க அங்கு ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1:50க்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார். அதன் பின்னர் மதியம் 3.30 மணிக்கு திரும்பவும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து நாக்பூர் செல்லவுள்ளார்.

பிரதமரின் வருகையை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் ட்ரான்கள் பறக்க தடை உள்ளது.

கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், ஹோப்ஸ், சித்ரா, சின்னிய்யம்பாளையம், நீலாம்பூர், நேரு நகர், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, SIHS காலனி, வெங்கிட்டாபுரம், இருகூர், AG புதூர், நீலிகோணம்பாளையம்,சிங்காநல்லூர் ஆகிய பகுதிகள் தற்காலிகமாக RED ZONE பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே நேற்று (08.04.2024) இரவு 10:00 மணி முதல் வியாழன் (11.04.2024) இரவு 10:00 மணி வரை என மொத்தம் 72 மணி நேரம் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் கோவைக்கு இந்தாண்டு வரும் 2 ஆம் முறை ஆகும்.