மகன், மகள் அடம்பிடிக்கின்றனர் என பைக், கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு தான் இந்த செய்தி
- by David
- Jun 13,2025
என் மகன்/மகள் இன்னும் ஓட்டுநர் உரிமம் பெறவில்லை, 18 வயது ஆகவில்லை ஆனால் இப்போதே பைக்/காரை நல்ல ஓட்டுவான் என நினைக்கும் அப்பாவி பெற்றோரா நீங்க? உங்கள் பிள்ளையை இதுபோல வாகனம் ஓட்ட அனுமதித்துள்ளீர்கள் என்றால் இனிமேல் அனுமதிக்காதீர்.
சென்ற மாதம் 31ம் தேதி கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒரு காரை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் பயணித்துள்ளான். காரை வேகமாக ஓட்டிய அவன், விளாங்குறிச்சி சாலை வந்தபோது தான் இயக்கிய வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி, எதிரே ஆடு மேய்த்து கொண்டு வந்த ரவி எனும் 60 வயது நபர் மீதும், ஆடுகள் மீதும் மோதியுள்ளான்.
இதில் அந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 12 ஆடுகள் மற்றும் 2 நாய்கள் இந்த விபத்தில் இறந்துபோகின. மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட ரவியும் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை போலீசார் விசாரித்த போது அந்த சிறுவன் தனது பெரியப்பாவின் காரை எடுத்து ஓட்டியுள்ளான் என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 30 நாட்கள் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் சிறுவனின் பெரியப்பாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மகன்/மகள் அடம்பிடிக்கின்றனர் என அவர்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பைக், கார் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். சொந்த பந்தங்கள் இதை முற்றிலுமாக ஊக்கப்படுத்தக்கூடாது.
சரியான வயதில் அவர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பள்ளி மூலம் முறையாக கற்றுக்கொடுத்து, ஓட்டுநர் உரிமம் வாங்கிய பின்னர், வாகனம் இயக்க அனுமதியுங்கள். மாறாக இப்போது ஓட்டினால் என்ன தவறு என நினைத்து நீங்கள் அனுமதித்தால், இளங்கன்று பயமறியாது செல்லும், அதன் பின் சட்டம் தன் கடமையை செய்யும்.