கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்யும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியமாக கோவை கலெக்டர் ரூ.770 அறிவித்திருந்தார். இந்த ஊதியம் தங்களுக்கு வழங்கப்படுவது இல்லை எனவும், இதை உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி கடந்த திங்கள் (9.6.2025) முதல் நேற்று வரை 4 நாட்களாக தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து  கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,454 சம்பளமாக வழங்கவும் (தினசரி சுமார் ரூ.681) கலெக்டர் அறிவித்த ரூ.770 வழங்க அவசியம் இல்லை எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் கலெக்டர் அறிவித்த ரூ.770 சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 5வது நாளாக போராட்டம் நடத்துவதற்கு கலெக்டர் அலுவலகம் வந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போராட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.