கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.60க்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி சாலை சந்திப்புக்கு முன்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் வடிகால் அமைந்துள்ளது.

இந்த வடிகால் செல்லும் வழியே புது தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் பாதை பெர்க்ஸ் பள்ளி சாலைக்கு அருகே உள்ள ராஜலக்ஷ்மி மில் சாலை வழியே செல்கிறது. எனவே அங்கேயும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளுக்காக வடிகாலின் ஒருபுறம் தடுக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக மழை பெய்து வருவதால் வடிகாலில் அதிக அளவிலான கழிவு நீர் செல்கிறது. இதில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் ராஜலக்ஷ்மி மில் சாலை வழியே வரக்கூடிய வடிகால் பகுதியில் குவிந்து வருகின்றன. இதனால் அங்கு பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

அப்பகுதியை சேர்ந்த சிலர் இது பற்றி கோவை மாநகராட்சிக்கு தெரிவித்த போது, அங்கு சேர்ந்த குப்பைகள் வடிகாலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அவை அங்கிருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள இடங்களில் குவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசுகையில், அவர்கள் கூறியதாவது :

வடிகாலில் முதல் முறை பிளாஸ்டிக் கழிவுகள் சேர துவங்கியதும் மாநகராட்சிக்கு தொலைப்பேசி அழைப்பு மூலம்  தெரியப்படுத்தினோம். அப்போது 2 வாரங்களாக எங்கள் புகாருக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுபற்றி தொடர்ச்சியாக அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றதனால், மே 31ம் தேதி வடிகாலில் இருந்த குப்பைகள் எடுக்கப்பட்டு, அருகே உள்ள இடத்தில் கொட்டப்பட்டன.

இதற்கு அடுத்த நாளே மீண்டும் குப்பைகள் வடிகாலில் சேர துவங்கியது. இதுபற்றி புகார் தெரிவித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் குப்பைகள் வடிகாலில் இருந்து அகற்றப்படவில்லை.

இந்த வடிகால் துடியலூரில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நீரில் நிறைய பிளாஸ்டிக் கழிவுகள், ரசாயன கழிவுகள் அடித்து வரப்படுகின்றன. இவை எல்லாம் இங்கு குவிந்து விடுகின்றன.

ஏற்கனவே வடிகாலின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு 3 மாதங்களாக அதன் பாதி வழியில் தான் நீர் செல்கிறது. இதுபோல கழிவுகள் வடிகாலில் அதிக நாட்கள் தேங்கி இருந்தால் அதனால் மிக பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும்.

மழை நாட்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து வடிகாலின் ஒரு பக்கம் இருந்தால் அதனால் நீர் எளிதில் மேலே எழும்பி சாலை மற்றும் வீடுகளுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

எனவே இதன் மேல் கவனம் செலுத்தி, குப்பைகளை தேங்காமல் அகற்றி, அதை இங்கேயே விட்டு செல்லாமல் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

படங்கள் : டேவிட் கருணாகரன்