கோவை மாநகரில் உள்ள கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் குதிரைகள் பல காலமாக சுற்றிவருகின்றன. இவை தனியாரால் வளர்க்கப்படும் குதிரைகளா அல்லது வேறு எங்கிருந்தோ ஓடி வந்த குதிரைகளா என்பது தெரியவில்லை. ஆனால் இவற்றால் மக்கள் அவதி படும் நிலை மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடந்த சனிக்கிழமை காலை இடையர்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த அன்னலக்ஷ்மி (46) என்பவரை சாலையில் சுற்றிக்கொண்டிருந்த சில குதிரைகளில் ஒன்று கடித்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குதிரைக்கடியால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. மேலும் இதுபோல  4 ஊசிகள் போடவேண்டும் என அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அன்னலக்ஷ்மி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து வருகிறார். அவருக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். குடும்பத்தின் தேவைகளுக்காக அதிகம் உழைக்கக்கூடிய அவர், குதிரை கடித்ததால், 2-3 நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு, மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால், அதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதால், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரிடம் பேசியபோது அவர் கூறியதாவது :

கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் குதிரைகளை பிடித்து செல்ல யாரும் வருவதில்லை. இன்னும் அவை அங்கு தான் சுற்றி வருகின்றன. மீண்டும் அந்த வழியே செல்ல அச்சுறுத்தலாக இருக்கிறது. குதிரை கடித்ததால் ஏற்பட்ட வலி இன்னும் குறையவில்லை. இரவு உறங்கும் போது வேதனையாக உள்ளது.


குடும்பத்தின் செலவுகளை நான் அதிகம் சுமக்க வேண்டிய நிலை உள்ளதால், தனியார் மருத்துவமனைக்கெல்லாம் செல்ல முடியாது. தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். சமீபத்தில் அரசு மருத்துவமனையில் 2 ஊசி போட்டுக்கொண்டேன். என்னை மீண்டும் சனிக்கிழமை (28.6.25) வர சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவரிடம் பேசுகையில் :- 

குதிரைகள் யாருக்கும் சொந்தமில்லை என்றால் அவற்றை மாநகராட்சி பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க பரிசீலிக்க வேண்டும். அதே சமயம் அவை தனியாருக்கு சொந்தமானவை என்றால், அவற்றை இது போல தெருக்களில் சுற்ற விட்டாலோ அல்லது அவற்றை பொது இடங்களில் கைவிட்டு சென்றாலோ, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை  மற்றும் அபராதம் விதிக்க அதிகாரம் உள்ள எஸ்.பி.சி.ஏ. (Society for Prevention of Cruelty to Animals - SPCA) எனும் அமைப்பு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.