கடந்த ஒரு சில நாட்களாகவே கோவையில் கொளுத்தி வந்த வெயில் கொஞ்சம் தணிந்து வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பம் சற்று குறைந்து காணப்படுவதால் மக்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலைமை இன்னும் சிறிது காலம் நீடிக்குமா என அறிந்துகொள்ள கோவை வெதர் மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் க்ரிஷிடம் இதுபற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

கடந்த 2-3 நாட்கள் கோவையில் வெப்பம் சற்று குறைந்துள்ளது உண்மைதான். இதற்கு வெஸ்டர்லீஸ் (கிழக்கே இருந்து மேற்கே நோக்கி வீசும் காற்று) பலமாக இருந்தது காரணம்.

அடுத்த 3 நாட்கள் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பொழிய வாய்ப்புள்ளது. கோவையிலும் இதே போல ஆங்காங்கே லேசானது முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. வால்பாறை போன்ற மலைபகுதிகளில் நல்லமழை பொழியவே வாய்ப்புள்ளது.

மேலே குறிப்பிட்டது போல மழைப்பொழிவு மற்றும் வெஸ்டர்லீஸ் அடுத்த சில நாட்களுக்கு நிலவவுள்ளதால், வெப்பம் தற்காலிகமாக குறையும்.

ஆனால் அதன் பின்னர் ஏப்ரல் முடியும் வரை மீண்டும் வெப்ப அளவு சற்று அதிகரித்து அதன் பின் மே மாதம் வருகையில் படிப்படியாக குறையும். கோவைக்கு ஏப்ரல் தான் உச்சகட்ட வெயில் காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.