கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் அவரின் பட்டா நிலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார்.

இவருடைய குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் குவாரிகளில் சிறிய அளவில் விதிமீறல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு முடிவு பெற்றது. ஆனால் அந்த அறிக்கையை ஆய்வு செய்த கோவை சப் கலெக்டர், குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டதாக கூறி செந்தாமரைக்கு ரூ.32 கோடியே 29 லட்சம் அபராதம் விதித்து  கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த ஆணையர், சப் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அவரது தொகையை ரூ.2 கோடியே 48 லட்சம் அளவிற்கு குறைத்து அபராத தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் உத்தரவை தாமாக முன்வந்து இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலர் விசாரணை நடத்தினார். அவர் ஆணையர் உத்தரவை ரத்து செய்தும் கோவை சப் கலெக்டர் விதித்த அபராத தொகையை உறுதி செய்தும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மன்றத்தில் செந்தாமரை வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது அனைத்து விதமான சுற்றுச்சூழல் அனுமதியும் பெற்ற பின்னரே குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் எந்த விதி மீறலும் இல்லை என்று மனதார தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசு தரப்பில், அபராத தொகையை குறைத்து வழங்கப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் உத்தரவு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதை ரத்து செய்த அரசுத்துறை செயலரின் முடிவு சரியானது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மனதாரர்களுடைய குவாரியை நடத்த உரிமை எதுவும் இல்லை என்றும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்திற்கு இணையான தொகையை அவரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி விரிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதில் பல்வேறு விஷயங்களை நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார். 

சம்பந்தப்பட்ட குவாரிகளில் இருந்து கற்கள் கிராவல் மண் எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அட்டவணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அட்டவணையில் உள்ள விவரங்களை ஏன் மனுதாரர் எதிர்க்கவில்லை என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

இதில் முறையான உரிமம் இல்லாமல் கற்களும் கிராவல் மண்ணும்  எடுக்கப்பட்டுள்ளது உறுதியாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த குற்றத்திற்கு அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட விசாரணைக்கு நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக புகார் அறிக்கை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

நேர்மையற்ற, பேராசை பிடித்தவர்கள் இடமிருந்து பூமியை காப்பாற்றுவதற்கு தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் உள்ளது என்பதையும் நீதிபதி இந்த வழக்கில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மனசாட்சி உள்ள ஒருவரால் புரிந்து கொள்ளவும் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி இந்த முறைகேடு இருப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.