கோவை மாநகரில் சாலை பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதி என்ன ஆனது?
- by David
- Jun 13,2025
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க ரூ.200 கோடியினை ஒதுக்கி தந்தார்.
இதன்மூலம் சுமார் 3676 எண்ணிக்கையிலான சாலைப்பணிகள் கிட்டத்தட்ட 505.61 கி.மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரபூர்வ தகவல் மூலம் தெரியவருகிறது.
இது குறித்த விவரம் பின்வருமாறு :-
அரசு வழங்கிய நிதியில், முதற்கட்டமாக, ரூ.52.25 கோடி மதிப்பீட்டில், 944 எண்ணிக்கையிலான 134.22 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக உள்ளூர் திட்டகுழுமநிதி, பொது நிதி, சிறப்பு நிதி, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மாநில நிதிக்குழுத்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 1826 எண்ணிக்கையிலான சாலைகள் 280.14 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.114.47 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்றாம் கட்டமாக தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு சேமிப்பு நிதியின் கீழ், 906 எண்ணிக்கையிலான சாலைகள் 91.25 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.33.28 கோடிக்கு விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வேண்டி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் சாலைப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்புப் பணிகளை இன்று (13.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து அவர் மேற்கு மண்டலம் வார்டு எண் -16க்கு உட்பட்ட தட்சன் தோட்டம், தடாகம் சாலை அன்னை அமிர்தா நகர், லேண்ட் மார்க் சிட்டி மெயின் ரோடு சரவணா நகர் மற்றும் அரவிந்தா நகர் ஆகிய பகுதிகளில், நடைபெற்றுவரும் சாலை சீரமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், மேற்கு மண்டலம் வார்டு எண்.43க்குட்பட்ட தடாகம் சாலை, ஆர்.கே.நாயுடு லே-அவுட், தெற்கு தெரு பகுதியில், மழைக்காலங்களில் மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.