கோவை மாவட்ட க.க.சாவடி அருகே கடந்த 14ம் தேதி காலை 6:45 மணியளவில் கேரளாவை சேர்ந்த தங்க நகை  வியாபாரி மற்றும் அவரின் உதவியாளர் காரில் பயணித்து கொண்டிருந்தப்போது அவர்களை ஒரு லாரியில் வந்த கும்பல் வழிமறித்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் தங்கக் கட்டிகளையும், ரூ.60,000 பணத்தையும் கத்தி முனையில் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதை அடுத்து இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனி படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக கேரளா எல்லையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கேரளா போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தங்கக் கட்டி கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் உறுதி செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய இரண்டு கார்கள் மற்றும் லாரியை கண்டுபிடித்து விசாரித்து வந்த நிலையில் மேலும் ஒரு கார் மீட்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விரைவில் கொள்ளை கும்பலை கைது செய்வோம் எனவும் அவர் கூறினர்.