காந்திமா நகர் பிரதான சாலை உள்பட கோவை வடக்கு மண்டலத்தில் 70+ சாலைகள் புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்தார் கோவை எம்.பி.
- by David
- Jun 16,2025
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.
முதலாவதாக மாநகராட்சியின் வடக்கு மண்டலம், வார்டு எண்.29-க்குட்பட்ட கணபதி கார்டன், மோர்மார்க்கெட் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
வார்டு எண்.29-க்குட்பட்ட கணபதி கார்டன் 10வது வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20.60 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் 202.00 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் கட்டும் பணியினையும், சிவசக்தி காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.36.00 லட்சம் மதிப்பீட்டில் 409.00 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் கட்டும் பணியினையும், அப்பையா லே-அவுட், முதல் மற்றும் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் 350.00 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் கட்டும் பணியினையும் மற்றும் கணபதிபுதூர், 10வது வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20.50 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 202.00 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் கட்டும் பணிகள் என வார்டு எண்.29க்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக ரூ.1 கோடியே 17.90 லட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
வார்டு எண்.26-க்குட்பட்ட இராமசாமி லே-அவுட் சாலைகள், பாலகுரு கார்டன் சாலைகள் உட்பட 41 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ.2 கோடியே 44.40 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும் மற்றும் காந்திமா நகர் பிரதான சாலை, கருப்பண கவுண்டர் லே-அவுட் பகுதி சாலைகள் உட்பட 39 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ. 2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும் மற்றும் வார்டு எண்.27-க்குட்பட்ட ஆவாரம்பாளையம் சாலை, பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கட்டடத்தினையும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைக்கப்பட்டது.
காந்திமா நகர் பகுதியில் பிரதான சாலை மிக மோசமாக சேதம் ஆகி உள்ளது. மழை, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் என பல காரணங்களால் இந்த சாலை சேதமானது. அதுவும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக மீண்டும் மீண்டும் இந்த சாலை தோண்டப்பட்டதால் இந்த சாலையில் குண்டுகுழி இல்லை, குண்டு குழிகளில் தான் சாலை உள்ளது என வாகன ஓட்டிகள் புலம்பி வந்தனர். இந்நிலையில் இப்போது இந்த சாலை சீரமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.