கோவையில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மைவி3 உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி. இவரது சார்பில் பாமக-வினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதில், கோவையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் மைவி3 நிறுவனம் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது.

அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இது வரை 2000 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது. கடந்த ஆண்டு மை வி3 மோசடிக்கு எதிராக புகார் கொடுத்தேன்.

காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 27ம் தேதி என் தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மை வி3 நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

அதற்கு பயன்படுத்தப் பட்ட செல்பேசி எண் மைவி3 நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி ஆகியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சத்யா ஆனந்த் மற்றும் விஜயராகவன் அறிவுறுத்தலால் தான் இந்த கொலை மிரட்டல் எனக்கு வந்துள்ளது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மைவி3 உரிமையாளர்கள் சத்தியானந்த், விஜயராகவன், மற்றும் ஒருவர் மீது போலீசார் கொலைமிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.