கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (02.05.2024) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர்  கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட  மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 1 நகராட்சி, 11 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 5 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் கிடைத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இப்பகுதிக்கான அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். புதிதாக ஆழ்குழாய் அமைக்கவும் மற்றும் பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்யவும் மற்றும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான இடங்களில் தண்ணீர் பந்தல் கூடுதலாக அமைத்திடவும் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முறையாக கண்காணித்திடவும் மற்றும் தண்ணீர் பந்தல்களை சுகாதாரமாக வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், கோடை வெயிலின் தாக்கம் குறித்து கோடை வெயிலில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

இக்கூட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்திஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.