கோவை அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பிரிவுகளை துவக்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்ரமணியன்
- by CC Web Desk
- Jun 15,2025
கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியமன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் புதுப்பிக்கப்பட்ட மன நல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம், பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவு, துணை இனப்பெருக்க மையம் ஆகியவற்றை திறந்து வைத்த பின் 50 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அண்மைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய மருத்துவத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெறும் வளர்ச்சி குறித்து பேசிய அவர், அங்கு ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை இல்லாத அளவிற்குப் பல புதிய கட்டமைப்புகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பற்றிய கேள்விக்கு, நீட் தேர்வைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான செய்திகள் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து தீர்வு காண்பதற்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 1,35,716 பேர் பங்கேற்றதில், 76,181 மாணவர்கள் தகுதி பெற்று உள்ளனர். நாடு முழுவதும் முதல் 100 இடங்களில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மாநிலத்திற்குப் பெருமை என அவர் கூறினார்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் பணியிடங்கள் பற்றிய கேள்விக்கு, சிறுவாணி பகுதியில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு 15-16 கிலோ மீட்டர் நடந்தே சென்று மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சீத்தம்பதி மலை கிராமத்தில் 53 வீடுகளில் வசிக்கும் 154 பேரில், 12 பேர் அரசின் மருத்துவ வசதியைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவத் துறையில் பற்றாக்குறை இல்லாமல் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், மேலும் 9,000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.