பில்லூர் அணை கிட்டத்தட்ட நிரம்பியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உபரி நீர் வெளியேற்றம் .... கரையோர பகுதி மக்கள் ஜாக்கிரதை
- by CC Web Desk
- Jun 16,2025
கோவை பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் ஏற்கனவே உயர்ந்து வந்துகொண்டிருந்த நீர் மட்டம் ஞாயிறு இரவு அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது.எனவே அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக வினாடிக்கு 14,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பருவமழை காலம் மீண்டும் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர் மட்டம் ஞாயிறு காலை 82 அடியாக இருந்த நிலையில் அணைக்கான நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியது.
தொடர் மழையால் அணைக்கான நீர் வரத்து உயர்ந்ததை அடுத்து அங்கு நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க துவங்கி நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கிய நிலையில் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது.