கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 2 வாரங்களுக்கு பின்னர் நடைபெற்றது.

மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 77 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனு வழங்கவந்த மாற்றுத்திறனாளிகளை அவர்கள் இருக்குமிடத்திற்கே சென்று மேயர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.