கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு கூடுதலாக 12 ஏக்கர் கேட்கிறது ஆணையம்
- by David
- Jun 06,2025
கோவை சர்வதேச விமான நிலையத்தை 632.95 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்குத் தேவையான நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு வழங்கியுள்ளது சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் நிலங்கள் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதலாக 12 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் விரிவாக்க பணிகள் தொடர்பாக தேவை என தமிழக அரசிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தக் கோரிக்கையை இன்னும் அரசு ஏற்கவில்லை எனவும் இது குறித்து எதுவும் முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது.
விமான நிலைய விரிவாக்க பணிக்காக தமிழக அரசு கையகப்படுத்தி ஆணையத்திடம் வழங்கியுள்ள நிலத்தில், 451.74 ஏக்கர் பட்டா நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் பணிகளை செய்யலாம் என்று ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக இன்னும் இரண்டு வார காலங்களில் 15 ஏக்கர் நிலத்தை ஆணையத்திடம் வழங்கிட வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.134.32 ஏக்கர் பாதுகாப்பு நிலம் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.இது பாதுகாப்பு நிலத்தின் ஒரு பகுதி எனவும் மற்றொரு பகுதி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிய வருகிறது.
சட்டப் பிரச்சனையின் காரணத்தால் 8 ஏக்கர் பட்டா நிலம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு நிலுவையால் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. வழக்கு முடிந்த பின்னரே அந்த 8 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக ஆணையம் அதற்கான ஆரம்பகட்ட பணிகளுக்கு டெண்டர்கள் கோரி இருக்கிறது. விரிவாக்கம் தொடர்பான முக்கிய பணிகள் எல்லாம் வரும் நாட்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.