கோவையில் வாகன நிறுத்துமிட வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் உள்பட 4 இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Parking) கட்ட முடிவு செய்யப்பட்டது.

முதலாவதாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Parking) கட்டப்பட்டு 2022ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் அந்த இடங்களில் சாலைகளில் வாகனங்களை நிறுத்த ஒரு புறம் மட்டும் அனுமதி வழங்கி, அதற்கான இடங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் இப்பகுதிக்கு ஷாப்பிங் செய்ய வரும் வாடிக்கையாளர்கள்,வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பலன் அடைந்தனர்.

இந்த பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது போலவே, காந்திபுரம் கிராஸ் கட் பகுதியிலும் அமைக்கப்படும் என 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கோவை மாநகராட்சி அறிவித்தது. பின்னர் ராஜ வீதியிலும் இந்த திட்டத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இதை தொடர்ந்து கிராஸ் கட் சாலையில் ரூ.24 கோடி மதிப்பில் 300 கார்களை நிறுத்தக்கூடிய அளவில் பன்னடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க உள்ள சாத்திய கூறுகளை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு 2023ல் சமர்ப்பித்தனர். மேலும் சுமார் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ராஜ வீதியில் மற்றொரு பன்னடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது பற்றியும் நகர்வுகள் அப்போது நடந்தது.

இந்த நிலையில் இப்போது வரை இந்த திட்டங்கள் அறிவிப்பாகவே உள்ளது என்பதால் இந்த திட்டங்கள் எப்போது நடைபெறும் என கேள்வி எழுந்துள்ளது. சமீபத்திய தகவல் படி, இந்த 2 திட்டங்களுக்கான முன்மொழிவு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி மற்றும் நிதியை வாரியம் ஒதுக்கியதும் இந்த பணிகள் துவங்கும் என தெரியவருகிறது. இந்த 2 திட்டங்களும் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில் முன்னெடுக்கப்பட உள்ளது.  தமிழக அரசு இதற்கு விரைவில் அனுமதி மற்றும் நிதியை வழங்க வேண்டும. 

கோவையில் அதிகரிக்கும் வாகன எண்ணிக்கைக்கும், வணிக ரீதியான முன்னேற்றங்களுக்கும் ஏற்ப வாகன நிறுத்துமிடங்கள் இல்லை என்று குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பொது இடங்களில் பார்க்கிங் பிரச்சனையால் எங்கெல்லாம் நெரிசல் ஏற்படுகிறதோ, அங்கு சாத்தியம் இருக்கும் பட்சம், வாகன நிறுத்துமிடங்களை மாநகராட்சி அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது.

இதை கவனித்த மாநகராட்சி இதற்கான தீர்வை வழங்க முயன்று வருகிறது. உதாரணத்திற்கு, புரூக்பீல்டு பகுதியில் பார்க்கிங் வளாகத்தை அமைத்தது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் அருகே ஏற்படும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் விதமாக லங்கா கார்னர் பேருந்து நிலையம் பின்புறம் பார்க்கிங் வளாகம் கொண்டுவரப்பட்டது. ரேஸ் கோர்ஸ் பகுதியில் பார்க்கிங் பிரச்சனை அதிகரிப்பதாக அறியப்பட்ட பின்னர், அதற்கு தீர்வாக 3 இடங்களில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. ரேஸ் கோர்ஸில் அகரமிப்புகள் இருந்த இடத்தை அகற்றி இதற்கான பணிகள் நடக்கின்றன. 

இதுபோன்ற நடவடிக்கைகள் மாநகராட்சியால் எடுக்கப்படுகின்றன, அதே சமயம் அவை இன்னும் அதிகமான இடங்களில் கொண்டுவரப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.