கன்னடத்தில் பேசமுடியாது என வாடிக்கையாளரிடம் விவாதம் செய்த வங்கி மேலாளரை பணியிடமாற்றம் செய்தது எஸ்.பி.ஐ.!
- by David
- May 21,2025
பொதுவாகவே ஒரு மாநிலத்தில் உள்ள அரசு/தனியார் நிறுவனங்களில் சாதாரண மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ள போது அம்மக்களுக்கு அந்த மாநில மொழியில் பேசி பொருட்களை/சேவைகளை பெறுவது தான் வசதியாக இருக்கும்.
சில வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலம் எளிதாக இருக்கும் ஆனால் ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசும் மாநில மொழியை அரசு/தனியார் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
குறிப்பாக வங்கிகள் போன்ற அவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் பணியாளர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டவர்களாக இருக்கவேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே பலமுறை கூறியுள்ளார்.
நேற்று, கர்நாடகா பெங்களூரு- சூர்யா நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் வாடிக்கையாளர் ஒருவருடன் கன்னடத்தில் பேச முடியாது எனவும் ஹிந்தி-யில் தான் பேசுவேன். வேண்டுமென்றால் எஸ்.பி.ஐ. வங்கி சேர்மேனிடம் பேசுங்கள் என வாக்குவாதம் செய்தார்.
இவ்வாறு அவர் பேசியது மிக பெரும் கண்டனத்தை பெற்றது. இதை அறிந்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் அவரை பணியிடமாற்றம் செய்து உள்ளது. இதை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கும் கலாச்சாரம் மற்றும் மொழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் மொழிக்கு மதிப்பளித்து என்பது மக்களுக்கு மதிப்பளிப்பதற்கு சமம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.