தமிழ் நாட்டில் 1,365 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக உள்ளது. சில லாபம் ஈட்ட முடியாதவையாக இருக்கின்றன.

எனவே இதற்கு மாற்று வழி தேடும் விதத்தில் 'மிஷன் ஒயிட் வேவ்'  எனும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனவும் இதில் கோவையை சேர்ந்த 2 தனியார் எம்.பி.ஏ. கல்லூரி மாணவர்கள் பால் உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு முக்கிய ஆய்வுகளை செய்து அவர்களுக்கு உதவ உள்ளனர் என கோவை வந்த பால்வள துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் பேசுகையில் :-

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கடன் வழங்குதல் மற்றும் தமிழகத்தில் உள்ள 9,000+ பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயங்கும் சங்கங்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டில், 1351 புது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளது. செயலிழந்து இருந்த 483 சங்கங்கள் செயல்படவைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட 650 சங்கங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,484 சங்கங்கள் புதிதாக இந்த 4 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால் குறைந்தது 1 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழ் நாட்டில் 1365 சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக உள்ளது. சில சங்கங்கள் லாபம் ஈட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளன. எனவே இதற்கு மாற்று வழி தேடும் விதத்தில், கோவை குமரகுரு பிஸ்னஸ் ஸ்கூல் மற்றும் ரத்தினம் பிஸ்னஸ் ஸ்கூல் உடன் தமிழக அரசு இணைந்து ஒரு திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. 

இந்த 2 எம்.பி.ஏ. கல்லூரிகளை சேர்ந்த திறன்மிகு இறுதியாண்டு மாணவ மாணவிகளை கொண்டு இந்த நலிவுற்ற சங்கங்களை ஆழமாக ஆராய்ந்து, அவர்களுக்கான பிரத்தியேகமான வர்த்தக திட்டத்தை வகுத்து கொடுத்து அவர்களை லாபம் ஈட்டும் சங்கங்களாக மறுகட்டமைக்கக்கூடிய திட்டம் - 'மிஷன் ஒயிட் வேவ்' (Mission White Wave) செயல்படுத்தப்படவுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டுல உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கால் நடை பராமரிப்புக்கான வட்டியில்லா கடன், கால் நடை வாங்க, வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கான செயல்திட்டம் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.