திடக்கழிவு மேலாண்மை முதல் கோழி இறைச்சி கழிவு வரை... வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்கள்!
- by David
- May 16,2025
கோவை மாநகரில் உருவாகும் கோழி கழிவுகளை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேலாண்மை செய்ய அப்பணிகளை நடத்திவந்த ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் மார்ச் 30 முதல் தடை விதித்தது. மேலாண்மை பணியை அந்த நிறுவனம் செய்தபோது குப்பைக்கிடங்கின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் துர்நாற்றம் பரவியதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இதற்கு பின்னர் சேகரமாகும் கோழி கழிவுகள் என்ன ஆகிறது என்ற விவரம் தெரியவராத சூழல் நிலவுவதால் வெள்ளலூர் குப்பை கிடங்கில் அந்த கழிவுகள் புதைக்கப்படுகிறதா என சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு நடத்தவேண்டும் என வெள்ளலூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் தரப்பில் 'குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு'வினர் சுற்றுசூழல் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 21.4.2025ல் வாரியம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு கட்டுப்பாடு வாரியத்தின் கோவை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் சந்திரசேகரன், மாசக்கட்டுப்பாடு வாரியத்தின் செயலருக்கு குப்பைக்கிடங்கில் மேற்கொண்ட ஆய்வு குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழுவின் செயலர் மோகன் அவர்களால் பெறப்பட்ட இந்த அறிக்கை நகலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் இருந்து தினமும் 1100 முதல் 1200 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகுவதாகவும், இதில் 950 மெட்ரிக் டன் தினமும் மேலாண்மை செய்யப்படுவதாகவும் மீதம் சுமார் 300 மெட்ரிக் டன் குப்பைகள் வெள்ளலூர் கிடங்கில் 25 ஏக்கர் நிலத்தில் கொட்டப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ஐ முறையாக அமல்படுத்தவில்லை எனவும் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் எடுத்து வரப்படுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் வெர்மிகம்போஸ்டிங் (Vermicomposting And BioGas Plant) பணிகளை செய்து வரும் தனியார் நிறுவனம் இந்த பணிகளை தொடர்ந்து செய்ய ஒப்புதல் மற்றும் பணி உரிமம் (Consent And Renewal Of Authorization) புதுப்பித்தல் ஆகியவற்றை செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல கோவை மாநகராட்சி தரப்பில் அங்கு செய்யப்படும் Material Recovery, Bio Gas Plant மற்றும் MicroComposting ஆகிய பணிகளுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் ஒப்புதல் மற்றும் பணி உரிமம் புதுப்பிக்காமல் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் முக்கியமாக கோழிக்கழிவுகள் புதைப்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பை கிடங்கில் வைத்து கோவை மாநகரில் உருவாகும் கோழி கழிவுகளை மேலாண்மை செய்து வந்த தனியார் நிறுவனம் அந்தப் பணியை அங்கே செய்ய 31.3.2027 வரை பணி நடத்த ஒப்புதல் பெற்று இருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் இந்த பனியால் பாதிப்புள்ளதாக குற்றம் சாட்டியதை அடுத்து அது மூடப்பட்டிருக்கிறது. வாரநாட்களை விட ஞாயிறுகளில் கோழி கழிவுகள் அதிகமாகிறது.
தற்போது அவை 'விக்கி டிரேடர்ஸ்' எனும் தனியார் நிறுவனம் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஆனால் இந்த பணியை செய்யும் இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் இசைவான எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதும் இந்த நிறுவனம் இப்பணியை செய்கிறது என்பது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த கழிவுகள் ஞாயிறு அன்று குப்பை கிடங்கில் ஆழமாக புதைக்கவும்படுகிறது எனவும், இவ்வாறு குப்பை கிடங்கில் கோழி இறைச்சி கழிவுகளை ஆழமாக புதைப்பதால் நீர் மாசு மற்றும் நில மாசுகள் ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் எல்லாம் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோவை மாநகராட்சியிடம் இது குறித்து கேள்விகளை எழுப்பவும், நடவடிக்கை எடுக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது