இந்தியா - பாக் இடையேயான தாக்குதல்கள் நிறுத்தப்படுகிறது - அமெரிக்க அதிபர் அறிவிப்பு
- by David
- May 10,2025
இந்தியாவின் பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மேல் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதற்கு பின்னர் பாக். ராணுவம் இந்திய மீது தாக்குதல் நடத்த, அதற்கு பதில் தாக்குதலை இந்தியா திருப்பிக்கொடுத்துவருகிறது.
2 நாடுகளும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளாக இருப்பதால் உலக நாடுகள் சுமூகமான முறையில் இந்த பிரச்சனையை முடிக்க கோரிக்கைகளை விடுத்து வந்தன. இந்த நிலையில் அமெரிக்க அரசின் தலையீட்டுக்கு பின்னால் 2 நாடுகளும் தங்கள் தரப்பு தாக்குதல்களை நிறுத்தி கொள்ள முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ராணுவ தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய ராணுவ தலைமை இயக்குநரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்துவதை இந்திய நேரப்படி மாலை 5.00 மணி முதல் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு தெரிவித்தார்.
மேலும், எந்தவித சமரசமும் இல்லாமல் தீவிரவாதத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை தொடர்ச்சியாக இந்தியா கொண்டுள்ளது எனவும், இதே நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.