கோவை மாவட்ட கலெக்டர் (ஆட்சித்தலைவர்) பவன்குமாரை இன்று கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் குழுவாக சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.

இதற்கு பின்னர்  எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை திட்டங்களை நிறைவேற்றக்கோரி இன்று கோவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்ததாக அவர் கூறினார்.

கோவை மாநகராட்சியிலே, கடுமையான வரி உயர்வு உள்ளது. சமீபத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் போடப்பட்டுள்ளது. (சமீபத்தில் கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற அவசர கூட்டத்தில், பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான மாதாந்திர கட்டணம் உயர்வு, குடிநீர் விநியோகத்திற்கான கட்டணம் உயர்வு -  குறிப்பாக குடிநீர் விநியோகத்திற்கான மாதாந்திர கட்டணத்தை ஆண்டுக்கு 3% உயர்தல் மற்றும் வைப்பு தொகையையும் அதே போல உயர்த்துதல் ஆகியவைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.)

இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் குடிநீர் விநியோக திட்டத்திற்காகவும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதால் அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து மனு கொடுத்துளோம், என கூறினார்.

மாவட்டத்தில் மழையால் விவசாய பகுதிகளில் வாழை உட்பட பல பயிர்கள் பாதிக்கபட்டுள்ளது , எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சிறுவாணி தண்ணீரை கேரள அரசு அடிக்கடி அணையில் இருந்து வெளியேற்றுகிறது எனவும், கோவை மாவட்ட நிர்வாகம் அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்த அவர், தற்போது மழை பெய்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் சூழலில்,  இப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கோவை மாநகரில் குப்பை எடுப்பதில்லை, நோய் வருகின்றது இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், வெள்ளலூர் பேருந்து நிலையம் 40 % பணிகள் முடிந்துள்ள நிலையில் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகள் மீது அதிகபட்சமாக  10 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.