கோவைக்கு சென்ற ஆண்டு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மாநகரில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த வந்தபோது பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர், குறிப்பாக மழைக்காலத்தில் சிரமம் அதிகரிக்கிறது என்று செய்தியாளர் சந்திப்பின் போது அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது வடகிழக்கு  பருவமழை காலம்.  
அதற்கு பதிலளித்த அமைச்சர், இதுபோன்ற சம்பவங்கள் இருந்தால் அது குறித்து கோவை மாநகராட்சி ஆணையரை ஆய்வு செய்ய அறிவுறுத்துவதாக கூறினார். மேலும் எங்கெல்லாம் குழிகள் தோண்டப்படுகிறதோ அங்கெல்லாம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பேரிக்கேடுகளை அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

கோவை மாநகரில் தொடர்ந்து 24x7 குடிநீர் விநியோக திட்டத்திற்காக பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்கான இப்போதும் பல சாலைகளில் பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் பணிகள் முடிந்தாலும், அதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படுவது இல்லை. சம்மந்தப்பட்ட இடத்தில் சாலைகள் போடப்பட்டாலும் சில மாத காலத்திற்குள் அங்கு மீண்டும் இதுபோன்ற பணிகளுக்காக குழிகள் தோண்டப்படுகிறது. இதனால் தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் சாலையில் செல்பவர்கள் மீண்டும் சிக்கலுக்குள்ளாகின்றனர்.

இது பற்றி சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் தமிழ்நாடு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் குடிநீர் விநியோக திட்டத்திற்காகவும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதால் அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர் அரசை கேட்டுக்கொண்டார். மேலும் அதை கோரிக்கை மனுவாக கோவை கலெக்டரிடம்  கொடுத்தார்.

அதே நாளில், கோவையின் பொறுப்பு அமைச்சராக உள்ள  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, இது மழைக்காலம் என்பதால் சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை, மழை முடிந்த பிறகு எங்கெல்லாம் பேட்ச் ஒர்க் செய்யவேண்டுமோ, எங்கெல்லாம் சாலைகள் அமைக்க வேண்டுமோ அங்கெல்லாம் அந்த பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் முதல் அப்பநாயக்கன்பாளையம் வரையிலான சாலைகள், துடியலூர் சாலை, ஜி.என்.மில் சாலை, உருமாண்டம்பாளையம் சாலை மற்றும் வெள்ளக்கிணறு சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, சேதமடைந்த சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. பணிகள் முடிவுற்ற இடங்களில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சாலைகளில் குண்டுகுழி என்பது கோவை மாநகரம் முழுவதும் காணப்படும் ஒரு பெரும் பிரச்சனை. பிற நாட்களை விட மழைக்காலங்களில் தான் அதன் பாதிப்பு அதிகமாகிறது. குழிகளில் தண்ணீர் தேங்குவதால், எங்கே குழிகள் உள்ளது என்பது அறியாமல் வாகனங்கள் அவற்றில் சிக்கி, வாகனத்திற்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.

காலம் தாழ்த்தாமல், கோவை மாநகரில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் நடந்து முடிந்த பகுதிகளில் மட்டும்மல்லாது சிறப்பு குழு அமைத்து மாநகர் முழுவதும் எங்கெல்லாம் சாலைகள் மோசம் என விரிவான ஆய்வு நடத்தவேண்டும்.

ஏனென்றால் புதிதாக அமைக்கப்பட்ட பல சாலைகளில் தற்போது சேதங்கள் உள்ளன. உதாரணத்திற்க்கு கோவை பீளமேடு ஏபிசி பள்ளி, பாரதி காலனி சாலைகளை எடுத்துக்கொள்ளலாம். இங்கு சாலைகள் சமீபத்தில் தான் போடப்பட்டது. சாலைகள் போடப்பட்ட சில மாதங்களில் மீண்டும் அதன் சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன.

அதை சிமெண்ட் போட்டு மூடினாலும், மீண்டும் சேதம் எளிதில் ஆகி உள்ளது. அந்த பள்ளி பகுதி துவங்கி நேரே செல்லும் சாலை இறுதிவரை குழிகள் ஏராளம்.
அடிப்படை வசதியான சாலை வசதி தரமானதாக, பயணிக்கப் பாதுகாப்பானதாக இருக்கவே வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.